Tuesday, July 27, 2010

கல்வி வளர்ச்சி நாள் விழா

 


             இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள்  விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக முற்பகலில் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றிய பின்னர் காமராசரின் திரு உருவப் படத்தை அலங்கரித்து பள்ளி கிராமத்தின் முக்கியப் பகுதிகள் வழியே மாணவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஊர்வலத்தில் மாணவர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வி விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி  வந்தனர்.
                பின்னர் 1- முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு முறையே ஆங்கில பாடல்கள் பாடுதல், தமிழ் மற்று ஆங்கில பாடல்கள் பாடுதல், பாரதியார் பாடல்கள் பாடுதல், திருக்குறள் ஒப்புவித்தல், தேசத் தலைவர்கள் பற்றிய பேச்சுப் போட்டி, தேசத் தலைவர்கள் பற்றிய கட்டுரைப் போட்டி ஆகியன நடத்தப்பட்டது.
                பிற்பகலில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான திரு.இராதா நாகராஜ் அவர்கள் தலைமையேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் திரு.செ இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பள்ளியில் நடைபெறும் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களின் திறன் வேளிப்பாட்டு நிகழ்வுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். பின்னர் வாழ்த்துரை மற்றும் கருத்துரை வழங்கிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இரா.மனோகரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா.சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு அ.வீ.விஜயகுமாரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கொ.பெ.திருவேங்கடம், பள்ளி கட்டடக் குழுத் தலைவர் திரு கோ.மோகன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் திரு கோ.மா.எத்திராசு ஆகியோர் பள்ளியின் பல்வேறு சிறப்புக்களை எடுத்துக் கூறி பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
                பின்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளித் தலைமையாசிரியர் திரு. பி.பொன்னுசாமி அவர்கள்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் ஓர் அரசு துவக்க/ நடுநிலைப் பள்ளி இவ்வளவு சிறப்பாக, தூய்மையாக, பல வண்ண மலர்த் தோட்டங்களோடும், ஒழுக்கமும், திறமையும் மிக்க மாணவர்களோடும் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர் பார்க்கவில்லை என்றும் தனியார் பள்ளிகளுக்கும் மேலான சிறப்பு கொண்டு திகழ்வதாகவும் கூறி பாராட்டி பேசினார்.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு சே.லீலாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.



























1 comment:

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி