ஜெர்மனி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகெங்கும் உள்ள கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் காணப்படும் தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த, தமிழ் கல்வி,கலை,கலாச்சாரம் சார்ந்த செய்திகளை எல்லாம் நேரடியாகச் சென்று அவற்றைத் திரட்டி, வருங்காலச் சந்ததினர் பயன்படுத்தும் வகையில் மின்னாக்கம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகம் வந்துள்ள இவ்வமைப்பின் தலைவர் ஜெர்மனி திருமதி சுபாஷினி ட்ரெம்மல், துணைத்தலைவர் கொரியா திரு நா.கண்ணன், பெங்களூரு ஸ்வர்ணலட்சுமி ஆகியோர் இன்று எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பள்ளியின் வளாகத் தூய்மை, தோட்ட பராமரிப்பு, சுற்றுச் சூழலை காத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைக் குழிகள், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே போல் மாணவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிய அவர்கள் அவர்களின் கல்வி, திறன்வெளிப்பாடு ஆகியவற்றை கேட்டறிந்ததோடு தற்போது தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டம் பற்றியும் அதன் நடைமுறைச் செயலாக்கம் பற்றியும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மகிழ்சி தெரிவித்தனர். நிறைவாக இப்பள்ளிபோல் அனைத்து பள்ளிகளும் சிறப்பாக இயங்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment